சந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான சித்திரை பெருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முதல் நாளன்று சந்தவெளி அம்மன், முருகபெருமான் அலங்காரத்திலும், 9ம் தேதி சப்த கன்னியம்மன் அலங்காரத்திலும், மூன்றாம் நாளான நேற்று முன்தினம் முப்பெரும் தேவியர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது.நான்காம் நாள் விழாவான நேற்று, 108 பால்குட ஊர்வலம், மஹா அபிஷேகம், கூழ்வார்த்தல், ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது. இரவு 7:30 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது.விழா நிறைவு நாளான நாளை, பிற்பகல் 12:00 மணிக்கு உற்சவர் சாந்தி அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சாந்த சொரூபினி அலங்காரமும், இரவு 7:00 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது.