சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
வாலாஜாபாத்: பழையசீவரம் சாலையில் இரவு நேரங்களில் ஆங்காங்கே ஓய்வெடுக்கும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் சங்கராபுரம் அடுத்து பழையசீவரம் உள்ளது. பழையசீவரம் துவங்கி உள்ளாவூர் கேட் வரையிலான சாலையில் இரவு 11:00 மணி வரை போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்நிலையில், பழையசீவரம் பகுதியில் வளர்க்கும் கால்நடைகள் இரவு நேரங்களில் முறையாக கொட்டகையில் பராமரிக்காமல் சாலையில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், சாலையில் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் தினசரி சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பழைய சீவரத்தில் கைவிடப்பட்ட சர்க்கரை ஆலை அருகே துவங்கி, மலை பேருந்து நிறுத்தம், நரசிம்ம சுவாமி கோவில் எதிர்ப்புற சாலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பகுதி சாலைகளில் ஏராளமான கால்நடைகள் இரவு நேரங்களில் ஓய்வெடுத்தும், சுற்றியும் வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது. எனவே, பழையசீவரம் சாலையில் இரவு நேரங்களில் ஓய்வெடுக்கும், சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.