பாலாறு பாலத்தில் மணல் குவியல் செவிலிமேடில் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம்: பாலாறு பாலத்தில் செவிலிமேடு பகுதியில் மணல் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு பாலம் வழியாக, தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் இருபுறமும் உள்ள பக்காவாட்டு சுவருக்கு சமீபத்தில் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இருப்பினும் பாலத்தின் சாலையின், இரு ஓரங்களிலும், 'எம்.சாண்ட்' மணல் குவியல் அகற்றப்படவில்லை. இதனால், இப்பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு சாலையோரம் ஒதுங்கும்போது மணல் குவியலில் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, செவிலிமேடு பாலாறு பாலத்தில் குவிந்துள்ள மணல் குவியலை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.