வேகவதி ஆற்று பாலத்தில் ஓட்டை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் சித்திவிநாயகர் பூந்தோட்டம் பகுதிக்கும், தும்பவனம் பகுதிக்கும் இடையே, வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.காஞ்சிபுரம் மாநகராட்சி சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியில் இருந்து தும்பவனம் பகுதிக்கு செல்லும் சாலையில் வேகவதி ஆறு குறுக்கிடும் இடத்தில் பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக ஓரிக்கை, டெம்பிள்சிட்டி, வேளிங்கபட்டரை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.இந்நிலையில், பாலத்தின் வழியாக கனரக வாகனம் சென்றதால் பாலத்தின் ஒரு பகுதியில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. தெரு மின்விளக்கு வசதி இல்லாத இப்பாலத்தின் வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் ஓட்டையான பகுதியில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, வேகவதி ஆற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.