ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
உத்திரமேரூர்,நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, உத்திரமேரூர் ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கட்டடம் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டது. உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் அருகே, வாடகை கட்டடத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில், பொதுமக்கள் அமர போதிய இட வசதி இல்லாமல் இருந்தது. இதனால், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு புதிய கட்டடம் கட்ட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதையடுத்து, 2022 -- 23ம் நிதி ஆண்டில், பொது நிதியின் கீழ், 12 லட்சம் ரூபாய் செலவில், உத்திரமேரூர் முருகன் கோவில் அருகே, புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, இரண்டு மாதங்களாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, புதிதாக கட்டப்பட்டுள்ள ஆய்வாளர் கட்டட திறப்பு விழா, உத்திரமேரூர் சரக ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ப்ரீத்திகா தலைமையில் நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், ஆய்வாளர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.