உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாம்புதூரில் நீர்நிலையை ஆக்கிரமித்து குவாரிக்கு பாதை அமைக்க எதிர்ப்பு

மாம்புதூரில் நீர்நிலையை ஆக்கிரமித்து குவாரிக்கு பாதை அமைக்க எதிர்ப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் சின்னாளம்பாடி ஊராட்சி, மாம்புதூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 200 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், பெரிய ஏரிக்கு அருகே தனிநபர் ஒருவரின் கல் குவாரி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த கல் குவாரிக்கு செல்ல போதிய பாதை வசதி இல்லாமல் உள்ளது. இதனால், பெரிய ஏரியில் இருந்து செல்லும் நீர்வரத்து கால்வாய் மீதும், சமூக காடுகள் வழியாகவும் வழியை ஏற்படுத்தும் முயற்சி, ஆறு மாதங்களுக்கு முன் நடந்தது.இதற்கு, மாம்புதூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் குவாரிக்கு பாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளது.இதையறிந்த கிராம மக்கள், நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, நீர்வரத்து கால்வாய் மீதும், சமூக காடுகள் வழியாகவும் பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், பொக்லைன் இயந்திரத்தை கொண்டு, நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட பாதையை அகற்றினர். தகவலறிந்த, வருவாய் ஆய்வாளர் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆகியோர், கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து மாம்புதூர் கிராமவாசிகள் கூறியதாவது:மாம்புதூர் கிராமத்தில் விவசாய தொழிலே பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் கல் குவாரி அமைப்பதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்படும்.நீர்வரத்து கால்வாய் மீது பாதை அமைப்பதால், ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் சிக்கல் ஏற்படும். தொடர்ந்து, இங்குள்ள சமூக காடுகளில், 25 ஆண்டுகளாக நாவல் உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கல் குவாரிக்கு பாதை அமைக்க சமூக காடுகள் வழியாக பாதை ஏற்படுத்தினால், மரங்கள் அழிக்கப்படும் சூழல் உள்ளது. தொடர்ந்து, குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லிக் கற்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களால், அப்பகுதிவாசிகளுக்கு சுவாச கோளாறு நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இப்பகுதியில் குவாரி அமைவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !