பயணியர் நிழற்குடை சேதம்
அவளூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், அவளூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. கடந்த 2015 - -16ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கணேசன், சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், 2.50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.அவளூர், கன்னடியன்குடிசை, நெய்குப்பம், சுமங்கலி நகர், கணபதிபுரம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்தோர் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பயணியர் நிழற்குடைக்கு செல்லும் படிகள் சேதமடைந்து, சரிந்த நிலையில் உள்ளது.இதனால், பயணியர் நிழற்குடைக்கு வருவோர் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள பயணியர் நிழற்குடை படிகளை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.