நத்தப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணியர் வாகனங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
நத்தப்பேட்டை, நத்தப்பேட்டை ரயில் நிலையத்தில், ஒப்பந்ததாரர் மூலம், வாகனம் நிறுத்தம் இல்லாததால், இங்கு நிறுத்தப்படும் பயணியரின் இருசக்கர வாகனங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தை அடுத்து, நத்தப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் ரயிலில் தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையத்தில், ரயில்வே நிர்வாகம் சார்பில், ஒப்பந்ததாரர் மூலம் கட்டணம் வசூலிக்கும் வகையில், வாகனம் நிறுத்தம் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், நத்தப்பேட்டை ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களில் வரும் பயணியர், தங்களது வாகனங்களை ரயில் நிலையம் அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு செல்லும் வாகனங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, நத்தப்பேட்டை ரயில் நிலையத்தில், ஒப்பந்ததாரர் மூலம் வாகன நிறுத்துமிடம் அமைக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்திஉள்ளனர்.