உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இளநகர் சாலையை ஆக்கிரமித்துள்ள நெல் குவியல்களால் விபத்து அபாயம்

இளநகர் சாலையை ஆக்கிரமித்துள்ள நெல் குவியல்களால் விபத்து அபாயம்

உத்திரமேரூர்:இளநகரில், சாலையை ஆக்கிரமித்து கொட்டப்பட்டுள்ள நெல் குவியல்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். உத்திரமேரூர் தாலுகா, இளநகர் கிராமத்தில், களியாம்பூண்டி -- பெருநகர் சாலை செல்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி பெருநகர், சேத்துபட்டு, வெள்ளாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். அதேபோல, அனுமந்தண்டலம், அழிசூர், இளநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது, இளநகர் கிராமத்தில் சொர்ணவாரி பருவ நெல் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை, திரவுபதி அம்மன் கோவில் அருகே செயல்படும், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இளநகரில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையம் அருகே, ஒரு நெற்களம் மட்டுமே உள்ளது. இதனால், விவசாயிகள் நெற்களத்தில் நெல்லை கொட்டி உலர்த்த போதிய இடம் இல்லை. அதனால், நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை உடனே விற்பனை செய்ய ஏதுவாக, எதிரே உள்ள களியாம்பூண்டி -- பெருநகர் சாலையை ஆக்கிரமித்து நெல்லை குவியலாக கொட்டி வைத்துள்ளனர். இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், நிலைத் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, இளநகரில் சாலையை ஆக்கிரமித்து கொட்டப்பட்டுள்ள நெல் குவியல்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ