உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மார்க்கெட் நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு வாகனங்கள் வந்து செல்வதில் சிக்கல்

மார்க்கெட் நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு வாகனங்கள் வந்து செல்வதில் சிக்கல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் நுழைவாயில் வளைவு பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், 1933ல் கட்டப்பட்ட ராஜாஜி மார்க்கெட், பழமையான கட்டடம் என்பதால், மழைக்கு ஒழுகி, சகதியாக மாறியதால், வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். நெருக்கடியான இடத்தில் ராஜாஜி மார்க்கெட் இயங்கி வந்ததால், பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தமிழக அரசு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 7 கோடி ரூபாய் செலவில், 258 கடைகள், கிடங்கு வசதியுடன் கட்டப்பட்ட புதிய ராஜாஜி மார்க்கெட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார். இதையடுத்து, கடந்த பிப்., 14ம் தேதி வியாபாரம் துவங்கப்பட்டு ராஜாஜி மார்க்கெட் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தது. தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தும்பவனம் அருணாசலம் தெரு பக்கம் மார்க்கெட் நுழைவாயில் வளைவு அருகில் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்துள்ளன. இதனால், சாலையின் அகலம் குறைந்துள்ளதால், காய்கறி ஏற்றி வரும், வாகனங்கள் மார்க்கெட்டிற்குள் சென்று வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு கடையை ஆரம்பத்திலேயே அகற்ற வேண்டும். அப்படி அகற்றாவிட்டால், அடுத்தடுத்து மார்க்கெட் சுற்றுச்சுவரையொட்டி ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் சூழல் உள்ளது. எனவே, ராஜாஜி மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஆரம்பத்திலேயே அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை