சேதமான சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சேக்குபேட்டை சாலியர் சாலையில், சேதமடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, 18வது வார்டு, சேக்குபேட்டை சாலியர் சாலை வழியாக, பேருந்து நிலையம், காமராஜர் வீதி, ரயில்வே சாலை, சங்கூசாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் உள்ள இச்சாலை, சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறு மழைக்கே சாலை சேதமடைந்த பகுதியில் தேங்கும் மழைநீர் சகதியாக மாறிவிடுகிறது. இதில் தடுமாறி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல், தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, சேக்குபேட்டை சாலியர் சாலையில், சேதமடைந்த பகுதியை, சீரமைப்பதோடு, மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.