உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி மின் கேபிள் அகற்றியதால் துவக்கம்

 மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி மின் கேபிள் அகற்றியதால் துவக்கம்

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில், மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணிக்கு இடையூறாக இருந்த மின் கேபிளை, மின்வாரிய அதிகாரிகள் அகற்றினர். அதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் வடிகால்வாய் துார்வாரும் பணியை துவக்கியுள்ளனர். காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில், மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மூங்கில் மண்டபம் சிக்னல் அருகில் குளம்போல மழைநீர் தேங்கியது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில், மழைநீர் வடிகால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக நீக்க முயற்சித்தனர். அப்போது, மழைநீர் கால்வாயில், மின்வாரியத்தினர், உயர் மின்னழுத்த மின் கேபிள் பதித்துள்ளது தெரியவந்தது. இதனால், கால்வாயை துார்வார முடியாத சூழல் ஏற்பட்டது. மின்வாரியத்தினர் மின் கேபிளை அகற்றினால்தான், கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க முடியும் என, நெடுஞ்சாலைத் துறையினர்தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் கடந்த 7ம் தேதி, படத்துடன் வெளியானது. இதைத்தொடர்ந்து, மின்வாரியத்தினர், வள்ளல் பச்சையப்பன் தெருவில், மழைநீர் வடிகால்வாய் வழியாக சென்ற மின் கேபிள் ஒயர் இணைப்பை அகற்றி, மாற்று வழியில், கேபிள் பதித்து மின் இணைப்பு வழங்கினர். துார்வாரும் பணிக்கு இடையூறாக இருந்த மின் கேபிள் அகற்றப்பட்டதால், மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் வள்ளல் பச்சையப்பன் தெருவில், மழைநீர் வடிகால்வாயை துார்வாரும் பணியை நேற்று துவக்கினர். மூன்று நாட்களில் கால்வாய் துார்வாரும் பணி முழுமை பெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை