கமிஷனர் வீட்டு முன் மழைநீர் பாதசாரிகள் கடும் அவஸ்தை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வைகுண்டபுரம் தெருவில், காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரின் அரசு இல்லம் மற்றும் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெரு வழியாக டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, அறிவுசார் பூங்கா, ரேஷன் கடை, நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில் உள்ள மாநகராட்சி கமிஷனரின் அரசு இல்லத்தின் நுழைவாயில் முன், சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கும் அவலநிலை உள்ளது.இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று காலை பெய்த மழைக்கு, குட்டைபோல மழைநீர் தேங்கியதால், இத்தெரு வழியாக சென்ற பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மாநகராட்சி கமிஷனரே மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.எனவே, வைகுண்டபுரம் தெருவில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரின் அரசு இல்லத்தின் முன் மழைநீர் தேங்காமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.