மூன்றே நாளில் சேதமடைந்த தார்ச்சாலை ராவத்தநல்லுார் மக்கள் ஆர்ப்பாட்டம்
உத்திரமேரூர்:ராவத்தநல்லுாரில் தரமில்லாமல், மூன்றே நாளில் சேதமடையும் அளவிற்கு தார்ச்சாலை அமைத்ததை கண்டித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் ஒன்றியம், காரணிமண்டபத்தில் இருந்து, ராவத்தநல்லுார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை சேதமடைந்து இருந்ததால், மூன்று நாட்களுக்கு முன் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதால், மூன்றே நாளில் ஆங்காங்கே பெயர்ந்துள்ளது. இவ்வழியே இருசக்கர வாகனங்கள் செல்லும்போதே, ஜல்லிக்கற்கள் சிதறி சாலை சேதமடைந்து வருகின்றன. சாலை போடும்போதே தரமில்லாமல் போடுவதாக அதிகாரிகளுடன் அப்பகுதி மக்கள், வாக்குவாதம் செய்துள்ளனர். இருப்பினும், ஊரக வளர்ச்சி துறையினர் அவசர கதியில் சாலை அமைத்து முடித்துள்ளனர். இந்நிலையில் தரமான சாலை அமைக்காததை கண்டித்து ராவத்தநல்லுார் கிராம மக்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தவறை சுட்டிக்காட்டியும் அலட்சியம் காட்டிய ஊரக வளர்ச்சி துறையினரை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.