உடைந்த குடிநீர் தொட்டி புதிதாக அமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் தென்கரை பகுதிவாசிகளுக்கு, கூடுதல் குடிநீர் ஆதாரமாக அப்பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன் சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. வீட்டு உபயோக கூடுதல் தேவைக்கு, அப்பகுதியினர் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.ஆறு மாதங்களுக்கு முன், அப்பகுதியில் மேய்ச்சலுக்காக வந்த இருமாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்ட போது, குடிநீர் தொட்டியில் மாடு முட்டியதால் உடைந்ததாக கூறப்படுகிறது.இதனால், இப்பகுதியினர் வேறு பகுதிக்கு தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது.எனவே, உடைந்த பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக அமைத்து, சுற்றிலும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் பீடம் அமைக்க நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.