பார்க்கிங் ஏரியாவான சாலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடம் உள்ளது. இப்பகுதியைச் சுற்றி, 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, பல லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள ஒரகடம் சந்திப்பில், வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையின் மேம்பாலம் கீழே, ஸ்ரீபெரும்புதுார் - -சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை செல்கிறது.தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் சாலைகளை பயன்படுத்தி தனியார் பேருந்து, கார், பைக் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகள், ஒரகடம் மேம்பாலத்தின் அருகில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன.அதேபோல், ஒரகடம் சந்தப்பில் உள்ள உணவகம் மற்றும் கடைகளுக்கு வருவோர், தங்களின் வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.இதனால், சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.மேலும், பீக் ஹவர் மற்றும் இரவு நேரங்களில், இவ்வழியாக வரும் வாகனங்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள கன்டெய்னர் லாரிகளில் மோதி, அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றன.எனவே, நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.