உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை, மழைநீர் வடிகால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் சிறப்பு கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்

சாலை, மழைநீர் வடிகால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் சிறப்பு கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்

ஊராட்சிகளில், கான்கிரீட் சாலை, மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, ஊராட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன. நேற்று ஊராட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம் பல்வேறு ஊராட்சிகளில் நடந்தன. வாலாஜாபாத் கம்பராஜபுரம் ஊராட்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று பேசியதாவது: வீடுகளில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்திய தண்ணீரை வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். ஊரை சுத்தமாக வைத்துக் கொள்வது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது என, ஊராட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார். காஞ்சிபுரம் திம்மசமுத்திரம் ஊராட்சியில், பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியருக்கு போதை விழிப்புணர்வு மற்றும் மனநலம் தொடர்பான பயிற்சி மற்றும் வட கிழக்கு பருவ மழைக்கு முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு மையங்களை சுத்தப்படுத்தி குடிநீர், மின் விளக்கு, கழிப்பறை ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கோனேரிகுப்பம் ஊராட்சி காமராஜர் நகருக்கு சிமென்ட் மற்றும் மழைநீர் வடிகால்வாய், சமுதாயகூடம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தீர்மானம். நிறைவேற்றப்பட்டது. திருப்பருத்திகுன்றம் சர்ச் தெருவிற்கு, கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடி கால்வாய் அமைக்க வேண்டும். வாலாஜாபாத் தென்னேரி ஊராட்சியில், அங்கன்வாடி தெரு, மந்தைவெளி தெரு, துர்க்கையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு சாலைகள் சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. சித்தாத்துார், வள்ளிமேடு மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்த வேண்டும். தேவரியம்பாக்கம் கிராமத்தில், மத்திய செயலாக்க துறை அதிகாரிகள் ஊராட்சி வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். புறக்கணிப்பு உத்திரமேரூர் தாலுகா, அரும்புலியூர் திடீர் நகர் பொதுக் குளக்கரையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரும்பாக்கம் - காவணிப்பாக்கம் பாதை அமைக்க வேண்டும். பழவேரி இருளர் குடியிருப்புக்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும். திருமுக்கூடலில், குடிநீர் குழாய் சீரமைக்க வேண்டும். குண்ணவாக்கம் ஊராட்சியில், பழங்குடியினர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட 18 அரசு தொகுப்பு வீடுகள் கட்டுமான பணியை விரைவாக முடிக்காத, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளை கண்டித்து, பழங்குடியினர் வெளிநடப்பு செய்தனர். அதேபோல, நான்கு ஆண்டுகளாக பல கிராம சபை கூட்டங்களில், ஊராட்சிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அதை நிறைவேற்றாமல் அலட்சியமாக உள்ள, ஊரக வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து, 4-வது வார்டு உறுப்பினர் குமார் கிராம சபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். எடமிச்சியில் சுடுகாட்டிற்கு கான்கிரீட் சாலை கோரியும், வி.ஏ.ஒ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம். மலையாங்குளத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஏரி பாசன கால்வாய்களை துார் வார வேண்டும். ஒழுகரையில் கான்கிரீட் சாலை வசதி மற்றும் சின்ன ஒழுகரையில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். மானாம்பதி அண்ணா நகருக்கு கான்கிரீட் சாலை வசதி மற்றும் வன்னியர் தெருவுக்கு வடிகால்வாய் அமைக்க வேண்டும். இவ்வாறு ஊராட்சிகளில் பல்வேறு பிரச்னைகளை, கிராம சபை கூட்டத்தில் பகுதி மக்கள் விவாதித்தனர். பரந்துார் விமான நிலையம் வேண்டாம் ஏகனாபுரம் ஊராட்சியில், பரந்துார் விமான நிலையத்தால், பறிபோகும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். மேலும், பரந்துார் விமான நிலையம் வேண்டாம் என, 16வது முறையாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. - நமது நிருபர் குழு -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை