கூரையில் வளரும் செடிகளால் வலுவிழக்கும் வருவாய் அலுவலகம்
ஸ்ரீபெரும்புதுார்;ஸ்ரீபெரும்புதுார் வருவாய் ஆய்வாளர் அலுவலக கூரையில் வளர்ந்துள்ள செடிகளால், கட்டடம் வலுவிழக்கும் நிலையில் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில், பட்டுநுால் சத்திரம் பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகம் உள்ளது. வருவாய் துறை சம்பந்தமாக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பராமரிப்பு இல்லாத இந்த அலுவலக கட்டடத்தின் கூரையில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கூரை வலுவிழக்கும் நிலை உள்ளது. அதே போல, செடிகளின் வேர்கள் கான்கிரீட் கூரையில் பரவுவதால், மழை காலங்களில், அலுவலகத்தின் உள்ளே மழைநீர் கசிவு ஏற்படும். எனவே, வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடத்தின் மீது வளர்ந்து வரும் செடிகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.