கன்னியம்மன் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரி கிராமத்தில் பழமைவாய்ந்த கன்னியம்மன் கோவில் உள்ளது. செரப்பனஞ்சேரி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், வெள்ளிக்கிழமை தோறும் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.அதே போல, இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த ஆண்டு, பல லட்சம் ரூபாய் செலவில், கோவில் முழுதும் புனரமைப்பு பணி, கோபுர வர்ணம் தீட்டும் பணிகள் நடந்தது.இந்த நிலையில், தற்போது கோவில் கோபுரத்தின் மீது, அரச மரச்செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால், கோபுரத்தின் மீது உள்ள சிற்பங்கள் மற்றும் கலசம் சேதமாகும் நிலை உள்ளது.எனவே, கோவில் கோபுரத்தின் மீது வளர்ந்துள்ள அரச மரச்செடிகளை அகற்ற, கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.