வாலாஜாபாதில் சாலையோரம் நடவு செய்த மரக்கன்றுகள் செழிமை
வாலாஜாபாத்:சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடம் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இருவழிச் சாலை, நான்குவழிச் சாலையாக விரிவாக்கப் பணி, இரண்டு ஆண்டுகளாக நடைபெறுகின்றன.இதேபோன்று, காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையிலான சாலை விரிவாக்கப் பணியும் நடைபெறுகிறது.இச்சாலைகளில், விரிவாக்கப் பணியின் போது, 1,350 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பசுமை மற்றும் காற்று மாசு தடுக்கும் பொருட்டு அகற்றம் செய்த மரக்கன்றுகளுக்கு மாறாக 10 மடங்கு எண்ணிக்கையிலான, 13,500 மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.அதன்படி, வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையோர குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் வாலாஜாபாத் புறவழிச் சாலையோரம், 2023ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதற்கட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.அந்த மரக்கன்றுகள் தற்போது 10 அடி உயரம் வரை வளர்ந்து செழிமையாக காட்சி அளிக்கிறது.சாலை விரிவாக்கப் பணி முடிவுற்றுள்ள மற்ற பகுதிகளிலும், அடுத்தடுத்து தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்ய உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.