காஞ்சியில் மாணவர்களுக்கு நிதியுதவி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர்வளாக கூட்டரங்கில், அமைச்சர் அன்பரசன் தலைமையில், குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பட்டா, சாலை வசதி, ஆக்கிரமிப்பு, உதவித் தொகை என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 150 பேர் மனு அளித்தனர். கடனுதவி
மனுவை பெற்ற அமைச்சர் அன்பரசன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை சார்பில், 3 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, 47.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான வங்கி கடனுதவிகளும், 5 பயனாளிகளுக்கு 3.70 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர் கடனுதவிகளும், 3 பயனாளிகளுக்கு 1.62 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகள் என்பன உட்பட, மொத்தம் 50 பயனாளிகளுக்கு 52.48 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.மேலும், பள்ளிக் கல்வித் துறை சார்பில், தமிழ்வழியில் பயின்று கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் 15 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாயும், பிளஸ் 2 சிறப்பு நிலை பெற்ற 15 மாணவர்களுக்கு தலா 20,000 ரூபாயும், சிறந்த செயல்பாட்டிற்காக ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு 1 லட்சம் ரூபாயும்,ஏனாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 75,000 ரூபாயும் வழங்கப்பட்டன. நடவடிக்கை
இக்கூட்டத்தில் கீழ்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் அளித்த மனு:காஞ்சிபுரம் தாலுகா, கீழ்கதிர்பூர் கிராமத்தில், 60 ஆண்டுகளுக்கு மேலாக, 48 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.நாங்கள் வசிக்கும் இடத்திற்கு, வீட்டு வரி, குடிநீர் வரி, ஆதார் அட்டை, மின் கட்டணம் என அனைத்து ஆவணங்களும் உள்ளன.எங்களுக்கு வேறு எங்கும் வீட்டு மனைகள் கிடையாது. நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா இல்லாததால், அரசின் சலுகைகளை பெற முடியவில்லை.நாங்கள் வசிக்கும் இடம் கோவில் புறம்போக்கு என தவறாக பதிவாகியுள்ளது. கோவிலே இல்லாத இடத்திற்கு கோவில் புறம்போக்கு தவறாக ஆவணங்களில் பதிவானதை எஸ்.எல்.ஆர்., ஆவணம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எனவே, நில வகைப்பாட்டை சரி செய்து எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - -எம்.பி., செல்வம், தி.மு.க.. எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.