பொன்னேரிக்கரை வரை மெட்ரோ ரயில் நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., தகவல்
காஞ்சிபுரம்:சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் இயக்கப்படுகின்றன. இரண்டாம் கட்ட திட்டம், கடந்த 2016ல் துவக்கப்பட்டது.இதில், மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- - பூந்தமல்லி, மாதவரம்- - சோழிங்கநல்லுார் ஆகிய மூன்று வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.இதன் அடுத்தகட்டமாக, பூந்தமல்லியில் இருந்து, புதிதாக அமைய உள்ள பரந்துார் ஏர்போர்ட் வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள பரந்துார் ஏர்போர்ட் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை, காஞ்சிபுரத்துடன் இணைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பகுதிமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.காஞ்சிபுரத்தில் வசிக்கும் மூன்று லட்சம் பேர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் இரண்டு லட்சம் பேர் என, ஐந்து லட்சம் பேருக்கும் மேலாக, மெட்ரோ ரயில் திட்டத்தை எதிர்பார்க்கின்றனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் அமைவது உறுதியாகி உள்ளதால், பொன்னேரிக்கரை வரை மெட்ரோ ரயில் திட்ட சேவையை கொண்டு வர வலியுறுத்தி இருப்பதாக, காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., சண்முகம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து எஸ்.பி., சண்முகம் கூறியதாவது:பூந்தமல்லியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே மெட்ரோ ரயில் திட்டம், பரந்துார் ஏர்போர்ட் வரை கொண்டு வரப்பட உள்ளது. பரந்துார் ஏர்போர்ட்டுக்கு, ஏனாத்துார் அருகே வலதுபுறம் திரும்பி, நீர்வள்ளூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் கொண்டு செல்லப்பட உள்ளதாக அறிந்தோம்.இந்த வழித்தடத்தில் சிறிய மாற்றம் செய்தால், காஞ்சிபுரம் நகர மக்களும், சுற்றியுள்ள கிராம மக்களும் பயன்பெறுவர். அதாவது, ஏனாத்துார் அருகே வலதுபுறம் ரயில் பாதை திரும்பாமல், பொன்னேரிக்கரை வரை நீட்டித்து, வலதுபுறம் திரும்பி நீர்வள்ளூர் செல்லலாம்.இதனால், பொன்னேரிக்கரையில் அமைய உள்ள புறநகர் பேருந்து நிலையத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும். காஞ்சிபுரம் நகர மக்கள் பொன்னேரிக்கரை வந்தால், பேருந்து சேவையும், மெட்ரோ சேவையும் கிடைக்கும்.இதுகுறித்து வாய்மொழியாக நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். மெட்ரோ ரயில் சேவையை பொன்னேரிக்கரை வரை அமைக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.