காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணி கண்காணிக்க சிறப்பு அலுவலர் நியமனம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேக திருப்பணியை கண்காணிக்கும் சிறப்பு அலுவலராக, ஹிந்து சமய அறநிலையத் துறை, நகை சரி பார்ப்பு குழுவின் இணை ஆணையர் வான்மதி நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம், டிச., 8ம் தேதி நடத்தும் வகையில், 29 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 12ம் தேதி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது, ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிகளை பழமை மாறாமல் புதுப்பித்தல், பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, திருப்பணியை விரைந்து முடிக்க, சிறப்பு அலுவலர் நியமிக்க உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, கோவில்களுக்கான நகை சரி பார்ப்பு குழுவின் இணை ஆணையர் வான்மதியை, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிக்கான சிறப்பு அலுவலராக, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர் ஆணை பிறப்பித்துள்ளார்.