உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தண்டரையில் தரமற்ற சாலை பணி: கலெக்டரிடம் புகார் மனு

தண்டரையில் தரமற்ற சாலை பணி: கலெக்டரிடம் புகார் மனு

சித்தனக்காவூர்:தண்டரை கிராமத்தில் புதிதாக அமைத்த சிமென்ட் கல் சாலை தரமற்று உள்ளதாகவும், அதை அகற்றி புதியதாக பணி செய்யக்கோரி கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சித்தனக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, உத்திரமேரூர் ஒன்றியம், சித்தனக்காவூர் ஊராட்சிக்கு உட்பட்டது தண்டரை கிராமம். இக்கிராமத்தில் உள்ள புளியந்தோப்பு தெருவில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், இரண்டு மாதத்திற்கு முன், 9.25 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது. ஏற்கனவே சிதிலமடைந்த கான்கிரீட் சாலையின் மேல் பழைய கட்டுமானங்கள் அகற்றப்படாமல் இச்சாலை போடப்பட்டுள்ளது. இதனால், புதிய சாலை வலுவிழந்துள்ளதோடு சாலையின் இருபுறத்திலும் அமைத்த பக்கவாட்டு சுவர்கள் தேவையான அளவிற்கு கான்கிரீட் கலவை இல்லாததால் உடைந்து விழுந்து வருகிறது. எனவே, இச்சாலை பணி குறித்து ஆய்வு மேற்கொண்டு சாலையை தரமாக அமைக்க நடவடிக்கை வேண்டும். சாலை பணியை முறையாக கண்காணிக்காத அதிகாரிகள் மற்றும் பணிக்கான முழு தொகையை ஒப்பந்ததாரருக்கு விடுவித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை