உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆகாயத்தாமரை சூழ்ந்து வீணாகி வரும் குளம்

ஆகாயத்தாமரை சூழ்ந்து வீணாகி வரும் குளம்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலம் அருகே, பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் மற்றும் ஆகாயத்தாமரை சூழ்ந்து வீணாகி வரும் குளத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்றத்துார் ஒன்றியம், சென்னக்குப்பம் ஊராட்சியில், ஒரகடம் மேம்பாலம் அருகில் குளம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த குளம் விளங்கியது. ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்த பின், ஒரகடம் சந்திப்பில் கடைகள் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்தன. அதன்பின், குளம் பராமரிப்பின்றி போனது. குளத்தை சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால் வாயிலாக குளத்தில் கலக்க விடுகின்றனர். இதனால், குளத்தின் நீர் மாசடைந்து வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகள் குளத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. தற்போது, குளத்தின் கரை முழுதும் செடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளது. அதே போல, குளம் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து உள்ளது. எனவே, ஒரகடம் சந்திப்பில் உள்ள இந்த குளத்தை துார்வாரி, சுவர் அமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில், நடைபாதை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !