தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான கம்பிகள் தரம் கேள்விக்குறி; மழையில் நனையும் அவலம்
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் தொகுப்பு வீடுகளுக்காக வழங்கப்பட்ட கம்பிகள் திறந்தவெளியில் போடப்பட்டுள்ளதால், மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகின்றன. கனவு இல்லம் உத்திரமேரூர் ஒன்றியத்தில், 73 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் வீடுகள் இல்லாத ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கனவு இல்ல வீடு கட்டும் திட்டம், பழங்குடியினர் வீடு கட்டும் திட்டங்களின்கீழ் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அரசு சார்பில், கட்டித் தரப்படும் தொகுப்பு வீடுகளுக்கு, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக சிமென்ட், கம்பிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளுக்கு தேவையான கம்பி, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டு உள்ளன. அப்படி வழங்கப்பட்ட கம்பிகள், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பு இல்லாமல், மண் தரையில் வைக்கப்பட்டு உள்ளன. சிமென்ட் வைப்பதற்கு மட்டுமே கட்டட வசதி உள்ளது. ஆனால், கம்பிகள் வைப்பதற்கான கட்டட வசதி இல்லாததால், வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்க உள்ள கம்பிகள், அங்குள்ள மண் தரையில் வைக்கப்பட்டுள்ளன. உறுதித்தன்மை மழை நேரங்களில் கம்பிகள் நனைந்து துருப்பிடித்து வருகின்றன. துருப்பிடித்த கம்பிகளை பயன்படுத்தி பயனாளிகள் வீடு கட்டினால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள கம்பிகளை, கட்டடத்தில் வைத்து பாதுகாக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.