தி.மு.க., ஆர்ப்பாட்டத்தால் காஞ்சியில் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம்: சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை எதிர்த்து, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக, காஞ்சிபுரத்தில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே நேற்று நடந்தது. தி.மு.க., மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலர் ராமகிருஷ்ணன், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த காமராஜர் சாலையில் உள்ள இருவழி பாதையில், ஒரு பாதையில் ஆர்ப்பாட்டம் நடந்ததால், மற்றொரு பாதையில் போக்குவரத்துக்கு போலீசார் அனுமதித்தனர். ஒரே பாதையில் இரு வழியிலும் வாகனங்கள் சென்றததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், நெரிசலில் சிக்க விரும்பாத வாகன ஓட்டிகள் அருகில் உள்ள வணிகர் வீதி வழியாக செல்ல முயன்றனர். வணிகர் வீதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள தனியார் மருத்துமவனை, வர்த்தக நிறுவனங்கள், பணி நிமித்தமாக காமராஜர் வீதி வழியாக பிற இடங்களுக்கு சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதில், தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.