தானியங்கி டிக்கெட் இயந்திரம் பழுதால் ரயில் பயணியர் அவதி
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில், தானியங்கி டிக்கெட் இயந்திரம் பழுதானதால், பயணியர் அவதி அடைந்து வருகின்றனர்.காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில், காலை நேரத்தில், ரயில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு, ஒரே ஒரு டிக்கெட் வழங்கும் கவுண்டர் மட்டுமே இருப்பதால், டிக்கெட் பெற நீண்ட வரிசையில் பயணியர் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.இதனால், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம், ரயில்வே துறை சார்பில் வைக்கப்பட்டது. எந்த ரயில் நிலையத்திற்கு, எத்னை பேர் செல்ல வேண்டும் என்ற விபரங்களை உள்ளீடு செய்தால், 'யுபிஐ' வாயிலாக பணம் செலுத்தி, தானாக டிக்கெட் பெற முடியும்.இந்த இயந்திரம், பயணியருக்கு உதவியாக உள்ள நிலையில், பல நேரங்களில், இயங்காமல் உள்ளது. நேற்று காலை நேரத்தில், இந்த இயந்திரம் இயங்காமல், 'அவுட் ஆப் சர்வீஸ்' என, காண்பித்ததால், ரயில் பயணியர் ஏமாற்றமடைந்தனர்.கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில், டிக்கெட் கிடைக்காததால், நீண்ட வரிசையில் நீன்று டிக்கெட் பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அடிக்கடி பழுதாகும் இந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை சரிவர பராமரிக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.