அவளூர் ஏரிக்கரையில் முள் மரங்களை அகற்ற வலியுறுத்தல்
வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்துள்ளது அவளூர் கிராமம். இக்கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ், 300 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரிநீரைக் கொண்டு அப்பகுதியில் 600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.இந்த மதகுகள் மற்றும் கலங்கல் பகுதிக்கு, விவசாயம் சார்ந்த பணிகள்மேற்கொள்ள அப்பகுதி விவசாயிகள் ஏரிக்கரை வழியை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.இந்நிலையில், அவளூர் ஏரிக்கரையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து புதராக காட்சி அளிக்கிறது.இதனால், விவசாயம் சார்ந்த பணிகளுக்காக மாட்டு வண்டி, டிராக்டர் போன்ற வாகனங்களை ஏரிக்கரை மீது இயக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.மேலும், ஏரிக்கரையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால், ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சேகரமாகி உள்ள தண்ணீரை விரைந்து உறிஞ்சிக் கொள்ளும் நிலை உள்ளது.எனவே, அவளூர் ஏரிக் கரையின் இருபுறமும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.