உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூரில் நாய்களால் தொல்லை பிடிக்க வாகனம் வழங்க வலியுறுத்தல்

உத்திரமேரூரில் நாய்களால் தொல்லை பிடிக்க வாகனம் வழங்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில் 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூட்டமாக திரியும் நாய்களால், அப்பகுதியினர் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். வாகனங்கள் வரும்போது சாலையின் குறுக்கே நாய்கள் ஓடுவதால், விபத்து ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. வாகனங்களில் செல்வோரை நாய் துரத்தி செல்வதால், கவனம் சிதறி எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவதும், பள்ளத்தில் விழுந்து காயம் அடைவதும் அன்றாட நிகழ்வுகளாக மாறியுள்ளன. இதனால், உத்திரமேரூர் பேரூராட்சியில், நிரந்தரமாக நாய் பிடிப்பு வாகனம் செயல்படுத்தப்பட்டு, தெரு நாய்கள் தொந்தரவை குறைக்க வேண்டுமென அப்பபகுதியினர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து, ஒரு நாய் பிடிப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப சுழற்சி அடிப்படையில், அந்தந்த பேரூராட்சிகளில் நாய் பிடிப்பு வாகனம் பயன்படுத்தப்படுகிறது. உத்திரமேரூர் பேரூராட்சிக்கென தனியாக ஒரு நாய் பிடிப்பு வாகனம் வழங்குவது குறித்து, மாவட்ட நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி