குளக்கரை நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ள சர்வதீர்த்த குளம், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.கடந்த 2011ம் ஆண்டு, 45 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் துார்வாரப்பட்டு, சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. மேலும், குளக்கரையை சுற்றிலும் டைல்ஸ் பதிக்கப்பட்டு, நடைபயிற்சிக்கான நடைபாதை அமைக்கப்பட்டது.குளத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிப்போர், தினமும் காலை, மாலை நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், நடைபாதையில் செடி, கொடிகள் புதர்போல வளர்ந்துள்ளன.இதன் காரணமாக விஷ ஜந்துக்கள் தஞ்சமடைந்துள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதை பயன்பாடின்றி வீணாகி வருகிறது.எனவே, சர்வதீர்த்த குளக்கரை நடைபாதையில் வளர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றி, நடைபாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.