உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதுார் சாலையில் தீப்பற்றி எரிந்த வாகனம் சேதம்

ஸ்ரீபெரும்புதுார் சாலையில் தீப்பற்றி எரிந்த வாகனம் சேதம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் சிப்காடில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து, டிராக்டருக்கு தேவையான இரும்பு உதிரி பாகங்களை ஏற்றிகொண்டு, 'டாடா ஏஸ்' வாகனம் ஒன்று, நேற்று மதியம் குன்றத்துார் நோக்கி சென்றது.வாகனத்தை செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரவு, 38, என்பவர் ஓட்டினார். ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில், பென்னலுார் அருகே வந்த போது, வாகனத்தின் முன்பகுதியில், திடீரென புகை வந்ததை அடுத்து, ஓட்டுனர் வாகனத்தை சாலையோரம் நிறுத்தினர்.இதையடுத்து, கண் இமைக்கும் நேரத்தில், வாகனம் தீப்பற்றி எரிய துவங்கியது. சிறிது நேரத்தில் மளமளவென தீ வாகன முழுதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.இது குறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள், தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர்.அதற்குள், 'டாடா ஏஸ்' வாகனம், முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !