சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்: சுங்குவார்சத்திரம் சந்திப்பில் நெரிசல்
ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் சந்திப்பில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஒட்டிகள் திண்டாடி வருகின்றனர். வாலாஜாபாத் - - மப்பேடு, ஸ்ரீபெரும்புதுார் -- காஞ்சிபுரம் சாலைகள் இணையும் இடத்தில், சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. தனியார் மருத்துவமனை, உணவகம், பூக்கடை, ஜவுளிக்கடை, சிறுகுறு வணிக நிறுவனம் உட்பட, 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், பல்வேறு தேவைக்காக நாள்தோறும் சுங்குவார்சத்திரம் வந்து செல்கின்றனர். தவிர, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும், ஏராளமான கனரக வாகனங்கள், தொழிற்சாலை பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பல்வேறு தேவைகளுக்காக, சுங்குவார்சத்திரம் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள், தங்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக, சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால், சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்படு கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலில், சுங்குவார் சத்திரம் சந்திப்பு திக்கு முக்காடி வருகிறது. எனவே, போக்கு வரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.