வாலாஜாபாத்தில் அரசு கலைக்கல்லுாரி கிராம வாசிகள் எதிர்பார்ப்பு
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் -செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் உள்ளது. இப்பகுதியில், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளி, அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளன.வாலாஜாபாத் அடுத்த தென்னேரி மற்றும் நெய்யாடிவாக்கம் ஆகிய பகுதிகளில், அரசுமேல்நிலைப் பள்ளியும், பழையசீவரத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியும் இயங்குகிறது.இந்த பள்ளிகளில், வாலாஜாபாத் சுற்றி உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 600 மாணவ, மாணவியர் மேற்படிப்பிற்கு தயாராகின்றனர்.இப்பகுதிகளில், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களில், மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு சென்றவர்கள் போக மீதமுள்ள மாணவர்கள், காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டில் இயங்கும் அரசு கலை அறிவியல் கல்லுாரியிலும்,பிற தனியார்கல்லுாரிகளிலும் பயில்கின்றனர்.வாலாஜாபாத் சுற்றி உள்ள பல கிராம மாணவ, மாணவியர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கல்லுாரிகளுக்கு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணித்து செல்வதில் சிரமப்படுகின்றனர்.வாலாஜாபாத் சுற்றி கிராமங்களாகவும், விவசாயம் சார்ந்த பகுதிகளாகவும் உள்ளது.இதனால்,கல்லுாரி படிப்பை ஏற்கனவே அவர்கள் சிரமமாக எண்ணக்கூடிய நிலையில், போக்குவரத்து மற்றும் துாரம் காரணமாக மேற்படிப்பை தொடர்வதில் பல்வேறு சிக்கலை சந்திக்கின்றனர்.எனவே, வாலாஜாபாத் மையமாக கொண்டு சுற்றி உள்ள கிராம மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், வாலாஜாபாத்தில் அரசு கலை- அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் , கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.