முக்கிய சாலைகளில் கூட்டம் நடத்த தடை வருமா? காஞ்சியில் நெரிசலை குறைக்க நடவடிக்கை தேவை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்யவும், பட்டு சேலை வாங்கவும், தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர்வாசிகள் வந்து செல்கின்றனர். இதனால், நகர் முழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.நெரிசலை குறைக்க போலீசார் பலகட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர். காந்திரோடு, பூக்கடைச்சத்திரம், மடம் தெரு, ரங்கசாமி குளம், ராஜவீதிகள் என, நகரின் முக்கிய பகுதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்து வருகின்றனர்.நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்வது மட்டுமல்லாமல், நகரின் முக்கிய சாலைகளில் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதை தவிர்க்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், நகரவாசிகளும் கருத்து தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரத்தில் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் காந்திரோடு, பெரியார் துாண், தாலுகா அலுவலகம் எதிரே பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்துகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சுற்றியுள்ள பகுதியில் வசிப்போருக்கும் பெரும் தொந்தரவாக உள்ளது.காந்திரோட்டில் எந்த அரசியல் கட்சியினருக்கும் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்க கூடாது என, நகரவாசிகள் தெரிவிக்கின்றனர். வணிகர் வீதி, ஏகாம்பரநாதர் கோவில் தேரடி போன்ற இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தலாம் எனவும், ஆர்ப்பாட்டம் நடத்த காவலான்கேட் பகுதியில் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.போக்குவரத்து மாற்றம் செய்வது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியினர் காந்திரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.