தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள நிழற்கூடங்கள்; கலெக்டரிடம் மனு
கரூர், : கரூர் எம்.பி., தொகுதி நிதியில் இருந்து, 16 நிழற்கூடங்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. அதில் முறைகேடு நடந்து இருக்கும் என, பா.ஜ., மாவட்ட செயலர் நவீன்குமார், கரூர் கலெக்டர் தங்க வேலுவிடம் மனு அளித்துள்ளார்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, 2019-24ம் ஆண்டு வரை, 1.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 16 இடங்களில் பயணிகள் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 15 நிழற்கூடங்களுக்கு தலா, 8 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஒரு நிழற்கூடம், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ளது.நிழற்கூடங்களுக்கு சந்தை மதிப்பை விட, கூடுதலாக செலவு செய்துள்ளனர். அதுவும் தரமான கட்டுமான பொருட்களை வைத்து கட்டியதாக தெரியவில்லை. பெரும்பாலான நிழற்கூடங்களின் கீழ், வேலை மதிப்பு பற்றி விளம்பர பலகை வைக்கப்படவில்லை. 16 நிழற்கூடங்களின் கட்டுமானத்தில், முறைகேடு நடத்து இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, முறையாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.