பழைய அரசு மருத்துவமனை முன்பூட்டப்பட்ட கழிப்பிடத்தால் அவதி
பழைய அரசு மருத்துவமனை முன்பூட்டப்பட்ட கழிப்பிடத்தால் அவதிகரூர்:கரூர் டவுன் பழைய அரசு மருத்துவமனை முன், தனியார் பங்களிப்பில் கட்டப்பட்ட கழிப்பிடங்கள், பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.கரூர், வாங்கல் சாலை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே, பல ஆண்டுகளாக தாலுகா மற்றும் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், கரூரில் அரசு மருத்துவக் கல்லுாரி அறிவிப்பு வெளியான பிறகு, அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்நிலையில், பழைய அரசு மருத்துவமனைக்கு வெளியே, தனியார் பங்களிப்புடன் பல லட்ச ரூபாய் செலவில், கழிப்பிடங்கள் கட்டப்பட்டன.கடந்த, 2020ல் கரூர் அருகே காந்தி கிராமத்தில் புதிதாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை, அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து, கரூர் டவுன் அரசு மருத்துவமனையில் இருந்து, சித்தா மருத்துவ பிரிவை தவிர மற்ற பிரிவுகள் அனைத்தும், புதிய மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. தற்போது, பழைய அரசு மருத்துவ மனையில் சித்தா பிரிவு, ஆயுர்வேத சிகிச்சை, இயற்கை மருத்துவ பிரிவுகள் மட்டும் செயல்படுகின்றன.இந்நிலையில், பழைய அரசு மருத்துவமனை முன் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், நோயாளிகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பழைய அரசு மருத்துவமனை முன் உள்ள, கழிப்பிடங்களை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.