| ADDED : ஜூலை 26, 2011 12:51 AM
க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றிய தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கந்தசாமியை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் கரூர் மாவட்ட செயலாளரை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றிய தே.மு.தி.க., செயல் வீரர்கள் கூட்டம் நேற்று தென்னிலையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும் முன்னாள் ஒன்றிய செயலாளர் கந்தசாமி எழுந்து, 'கடந்த 2005ம் ஆண்டு முதல் பல லட்சம் ரூபாய் செலவு செய்து க.பரமத்தி ஒன்றிய பகுதியில் தே.மு.தி.க.,வில் 200க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கிய, என்னை மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தன்னிச்சையாக செயல்பட்டு, ஒன்றிய செயலாளர் பதவியை பறித்தார். தே.மு.தி.க., வளர்ச்சிக்கு பாடுபட்ட என்னை ஒன்றிய செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கி விட்டு, புதிய செயலாளரை நியமிப்பது எந்த வகையில் நியாயம்? என மாவட்ட செயலாளரை பார்த்து கேள்வி எழுப்பினார்.மாவட்ட அவை தலைவர் தங்கவேல், 'கட்சி விபரங்களை மட்டும் பேச வேண்டும்' என கூறியதால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் புதிதாக நியமித்த ஒன்றிய செயலாளர் ராமசாமி, கடந்த ஓராண்டாக எந்த கூட்டத்துக்கும் அழைப்பு விடுப்பதில்லை. மேலும், கட்சி உறுப்பினர்களை தொடர்பு கொள்ளுவது இல்லை' என ஒன்றிய செயலாளர் ராமசாமி மீது சராமரியாக புகார் தெரிவித்தனர். அப்போது மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் தொண்டர்கள், நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், 'ஒன்றிய செயலாளர் ராமசாமி பதவியில் நீடித்தால் க.பரமத்தி ஒன்றிய பகுதியில் தே.மு.தி.க., உறுப்பினர்கள் அனைவரும் கட்சியிலிருந்து விலகி கொள்வோம்' என தெரிவித்தனர். கூட்டம் முடிந்ததும் முன்னாள் ஒன்றிய செயலாளர் கந்தசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர் கிருஷ்ணனை, கந்தசாமியை ஒன்றிய செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். அப்போது ஒன்றிய செயலாளர் ராமசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் கந்தசாமி ஆகிய இருவரின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் காரில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் க.பரமத்தி தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.