சாலை நடுவே மின் கம்பங்கள் மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர்: கரூரில் சாலையின் நடுவே மின் கம்பங்கள் உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர் கவுரிபுரம் பகுதியில், வியாபார நிறுவனங்கள், மாவட்ட தி.மு.க., அலுவலகம், மருத்துவமனைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்நிலையில், கவுரிபுரத்தில் சாலையின் நடுவே மின் கம்பங்கள் உள்ளன. அதை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே மின் கம்பங்கள் இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். பள்ளி, கல்லுாரி வாகனங்களும், மருத்துவ மனைகளுக்கு ஆம்புலன்ஸ்களும் கவுரிபுரம் பகுதி வழியாக செல்வதால், சாலையின் நடுவே உள்ள, மின் கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.