மேல்முறையீட்டு வழக்கில் கோவைதொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
கரூர்:தென்னிலை அருகே நடந்த, பெண் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டில், தொழிலாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று தீர்ப்பளித்தது.கோவை மாவட்டம், சிங்காநல்லுார் பகுதியை சேர்ந்தவர் நடராஜ், 54, கூலி தொழிலாளி. இவர், கரூர் மாவட்டம் தென்னிலை அருகே கார்வாழியில் கடந்த, 2017ல் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது, உடன் வேலை செய்து வந்த மதுரையை சேர்ந்த தனலட்சுமி, 48; என்பவரை கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்ததாக, தென்னிலை போலீசார் நடராஜை கைது செய்து, கரூர் மகளிர் விரைவு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், 2020ல் நடராஜ் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் தென்னிலை போலீசார், தனலட்சுமி கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.அதில் நடராஜூக்கு, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. இதையடுத்து, நடராஜ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.****************