உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் பட்டா நிலங்களில் நுாதன மணல் கொள்ளை

கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் பட்டா நிலங்களில் நுாதன மணல் கொள்ளை

கரூர்:கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதிகளில் கடந்த, 2011-16ல் அ.தி.மு.க., ஆட்சியில், 10க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், ஆன்லைன் மூலம், குறிப்பிட்ட குவாரிகளில் மட்டும் மணல் விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி கடந்த, 2019ல் மணல் குவாரிகள் மூடப்பட்டன. மணல் தேவைக்காக, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் திறக்கப்பட்ட மணல் குவாரிகளும் படிப்படியாக மூடப்பட்டன.கடந்த, 2021ல், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், காவிரியாற்று பகுதியில் நன்னியூர் புதுார், மலையம்பாளையம் பகுதியில், இரு மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. ஆனால், அமலாக்கத்துறை நடவடிக்கை காரணமாக, இரண்டு மணல் குவாரிகளும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், காவிரியாறு, அமராவதி ஆற்றுப்பகுதிகளில், லாரி, மாட்டு வண்டிகள், இருசக்கர வாகனங்கள் மூலம், இரவு நேரத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது.ஆனால், மணல் கொள்ளையர்கள் மீது, காவிரியாற்று பகுதிகளான வேலாயுதம்பாளையம், வாங்கல், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை போலீஸ் ஸ்டேஷன்களிலும், அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், க.பரமத்தி, தான்தோன்றிமலை ஆகிய போலீஸ் ஸ்டேஷனிலும் பெயருக்கு ஒரு சில வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மணல் கொள்ளையர்களுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளின் பின்புலம் உள்ளதால், பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவது இல்லை. இந்நிலையில், திருட்டுத்தனமாக மணல் அள்ளும் வகையில், ஆற்றுப் பகுதியின் கரையோரத்தில் உள்ள பட்டா நிலங்கள் மீது, மணல் கொள்ளையர்களின் பார்வை விழுந்துள்ளது.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:மணல் குவாரிகள் செயல்படாததால், காவிரியாற்று பகுதிகளில் அதிகளவில் மணல் தேங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம், காவிரியாற்றில், 1.50 லட்சம் கன அடி வரை தண்ணீர் சென்றது. இதனால், கரையோர பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் மணல் அதிகளவில் தேங்கியுள்ளன.அந்நிலங்களில் ஒப்பந்த அடிப்படையில், ஒரு தொகை நிர்ணயம் செய்து, மணல் அள்ளப்படுகிறது. அதை, அரசு துறை அதிகாரிகள், போலீசார் கண்டுகொள்வது இல்லை. இதனால், விவசாய கிணறுகள், போர்வெல்களில் நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை