கரூர்: என் குடும்பத்தாரை ஏமாற்றி, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, கிரையம் செய்து கொண்ட, மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய நிலத்தை மீட்டு தர வேண்டும்,'' என, பிரகாஷ் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.கரூர், மேலக்கரூர் சார்ப்பதிவாளர் முகமது அப்துல் காதர் கொடுத்த புகார்படி, போலியான ஆவணங்கள் தயாரித்து, 22 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து கொண்டதாக, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் யுவராஜ் உள்ளிட்ட, ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில், தன்னை கைது செய்து விடாமல் இருக்க, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலருமான விஜயபாஸ்கர், கரூர் நீதிமன்றத்தின் முன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், நிலத்தின் அசல் ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி நேற்று, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், புகார் கொடுக்க வந்த பிரகாஷ், 48, என்பவர் கூறியதாவது:கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், என் நீண்ட கால நண்பர். நான் அ.தி.மு.க.,வை சேர்ந்தவன். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில், எலக்ட்ரிகல் நிறுவனம் நடத்தி வருகிறேன். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், எனக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை உள்ளது.இந்நிலையில், சமீபத்தில் தறி போட வேண்டும் என தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள எனது, 22 ஏக்கர் நிலத்தை, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விற்பனைக்கு கேட்டார். உறவினர் மகன் பிரவீன் பெயரில் எழுதி தருமாறு கேட்டார். நான் தர மாட்டேன் என சொல்லி விட்டேன். இதனால் என், 22 ஏக்கர் நிலத்தை மகள் ஷோபனா பெயரில் கடந்த பிப்., 2ல் தான செட்டில்மென்ட் செய்து விட்டேன்.இதையறிந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், உறவினர் மகன் பிரவீன் உள்பட பலர் கடந்த பிப்., 27ல் வாங்கல் காட்டூரில் உள்ள, என் வீட்டுக்கு வந்து என்னை மிரட்டி, பரமத்தி வேலுாரில் இருந்து, அன்றிரவு காரில் கரூருக்கு கடத்தி சென்று அடித்தனர். கடந்த ஏப்., 4ல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் என் வீட்டுக்கு வந்து, அசல் ஆவணங்களை கேட்டு மிரட்டினர்.பிறகு போலியான ஆவணங்கள் மூலம், என் மகள் ஷோபனா, மனைவி சசிகலா ஆகியோரை மிரட்டி, 22 ஏக்கர் நிலத்தை ரகு, சித்தார்த்தன், வக்கீல் மாரப்பன், செல்வராஜ் ஆகியோர் பெயரில் மேலக்கரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஏப்., 6ல் கிரையம் செய்து கொண்டனர். நிலத்தின் அசல் ஆவணங்கள் என்னிடம் உள்ளதால், போலியான ஆவணங்கள் மூலம் கிரையம் செய்த நபர்களுக்கு, ஆவணங்களை தரக் கூடாது என, மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மே., 11ல் மனு கொடுத்தேன்.இதனால், மேலக்கரூர் சார்ப்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகார்படி யுவராஜ், பிரவீன், உள்பட ஏழு பேர் மீது கடந்த, 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் பின்புலம் உள்ளவர் என்பதால், விஜய பாஸ்கர் மீது புகார் கொடுக்காமல் இருந்தேன். தற்போது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், புகார் கொடுக்க வந்தேன்.என் குடும்பத்தாரை ஏமாற்றி, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, கிரையம் செய்து கொண்ட, மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு கூறினார்.