| ADDED : ஜூன் 17, 2024 01:34 AM
கரூர்: கரூர் அருகே சாலையில் கொட்டப்படும் குப்பைகளை, சிலர் தீயிட்டு கொளுத்துவதால், அருகில் உள்ள அரசு பள்ளிகள் புகை மண்டலத்தில் சிக்கி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-கோவை சாலையில் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில், அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கோவை சாலையில் வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீ கடைகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இதில் சேரும் குப்பைகள், அரசு பள்ளிகளுக்கு அருகில் கொட்டப்படுகிறது.ஆனால், பஞ்சாயத்து நிர்வாகம் சரிவர அள்ளாததால், அப்பகுதியில் உள்ள சிலர், குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் எழும் புகை, அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்கிறது. அப்போது, வகுப்பறையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இருமல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் புகார் தெரிவித்தும் பஞ்சாயத்து கண்டுகொள்ளவில்லை.எனவே, பள்ளிகளுக்கு அருகில் கொட்டப்படும் குப்பையை உடனடியாக அள்ளி அப்புறப்படுத்த, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.