சென்னையில் கள்ளநோட்டு அச்சடித்த 5 பேர் சிக்கினர்
கரூர்: சென்னையில் கள்ள நோட்டு அச்சடித்த ஐவரை, போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர் காண்டீபன், 52, தான்தோன்றிமலை டாஸ்மாக் கடையில், 500 ரூபாயை கொடுத்து, செப்., 9ல் மது கேட்டுள்ளார். கடை மேற்பார்வையாளர் வேணு விஜய், அவர் கொடுத்தது கள்ள நோட்டு என அறிந்து, தான்தோன்றிமலை போலீசில் புகாரளித்தார். விசாரணையில், காண்டீபனிடமிருந்து, 10,500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காண்டீபன் அளித்த தகவலின்படி, மயிலாடுதுறை புதுத்தெரு ராஜேந்திரன், 44, என்பவரை போலீசார் திருச்சியில் கைது செய்தனர். சேலத்தை சேர்ந்த ஜெயக்குமார், 48, என்பவரை சென்னையில் பிடித்தனர். இவர்கள் தகவல்படி, கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த சானு, 44, ஆந்திராவை சேர்ந்த விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமிருந்து, 6 லட்சத்து, 21,500 ரூபாய் கள்ள நோட்டுகள், தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். சென்னையில் கள்ளநோட்டு அச்சடித்தது விசாரணையில் தெரிந்தது.