அதிக லாபம் பெற திணை பயிரிட வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
அரவக்குறிச்சி, க.பரமத்தி வேளாண் உதவி இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆடி மற்றும் புரட்டாசி மாத சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆடி மற்றும் புரட்டாசி மாதம் திணை சாகுபடிக்கு ஏற்ற காலமாக உள்ளது. திணை சாகுபடி செய்ய ஒரு ஹெக்டர் நிலத்தில் அடி உரமாக, 12.5 டன் மத்திய தொழு உரம் கடைசி உழவின் போது பரப்பி நிலத்தை நன்கு உள வேண்டும். பயிர் அறுவடைக்கு பின் நிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.வரிசை விதைப்பாக இருந்தால் ஒரு ஹெக்டருக்கு, 10 கிலோ விதை தேவைப்படும். துாவுவதாக இருந்தால் ஒரு ஹெக்டருக்கு, 12.5 கிலோ விதை தேவைப்படும். பயிர் வரிசைக்கு இடைவெளியாக 22.5 சென்டிமீட்டர், 7.5 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் அசோஸ்பாசை மணல் கலந்து நிழலில் உலர்த்தி அதன் பிறகு விதைக்க வேண்டும்.ஒரு ஹெக்டருக்கு முறையே 44 கிலோ தழைச்சத்து, 22 கிலோ சாம்பல் சத்து தேவைப்படும். இந்த பயிரில் பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் இருக்காது, கதிர்கள் நன்கு காய்ந்து இலைகள் பழுத்தவுடன், அறுவடை செய்து களத்தில் காய வைத்து அடித்து தானியங்களை பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். இதில் விவசாயிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கூடுதல் விவரங்களுக்கு, க.பரமத்தி வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.