நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைக்கு ஜூன் 25க்குள் விண்ணப்பிக்கலாம்
கரூர், நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க வரும், 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 2025--26 நிதியாண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில், 10 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். சம்பந்தப்பட்ட கிராமத்தில் பயனாளி நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளியிடம் கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம், 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்.திட்ட செலவினத்தில், 50 சதவீதம் பங்களிப்பு செய்ய வேண்டும். நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாத தீவன செலவு ஆகியவற்றுக்கான மொத்த செலவில், 50 சதவீதம் மானியம் அரசால் வழங்கப்படும்.ஒவ்வொரு பயனாளிக்கும், 250 எண்ணிக்கையில், 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு கால்நடை மருந்தகத்திற்கு சென்று, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தை வரும், 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.