ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சேதமடைந்த நிலையில் இரும்பு துாண்கள்
கரூர், கரூர் அருகே, ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, வைக்கப்பட்டுள்ள இரும்பு துாண்கள் சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர்.கரூர்-திண்டுக்கல் ரயில்வே பாதை, பசுபதிபாளையம் தொழிற்பேட்டை சாலையின் குறுக்கே மேல் பகுதி யில் செல்கிறது. இந்நிலையில், கரூர்-திண்டுக்கல் ரயில்வே வழித்தடம் மின் மயமாக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் செல்லாத வகையில், இரும்பு ராட்சத துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரூரில் இருந்து தொழிற்பேட்டை, மேலப்பாளையம், சணப்பிரட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு, அந்த சாலை வழியாக வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.ஆனால், புதிய இரும்பு துாண்களின் கான்கீரிட் பகுதி சேதம் அடைந்துள்ளது. இரும்பு துாண்கள் சாய்ந்த நிலையில், எந்நேரமும் கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, தொழிற்பேட்டை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், சாய்ந்த நிலையில் உள்ள துாண்களை மாற்ற, கரூர் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.