போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பு கலெக்டரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி
கரூர், தனது வீட்டை சேதப்படுத்திய உறவினர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, சேந்தமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மகேந்திரன், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.அரவக்குறிச்சி அருகே, சேந்தமங்கலம் ரெங்கப்பக்கவுண்டன்வலசை சேர்ந்த மாற்றுத்திறனாளி மகேந்திரன், அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர். என் புகார் மீது நடவடிக்கை எடுத்தால்தான், கலெக்டர் அலுவலக வளாகத்தை விட்டு செல்வேன் என்ற கண்ணீர் விட்டு அழுதார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சமாதானப்படுத்தி, மனு கொடுக்க அழைத்து சென்றனர்.மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த, 16 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டேன். இந்த திருமணத்தில், எனது குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை. தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, ஜூலை, 12ம் தேதி வீட்டு கூரையை சேதப்படுத்தி விட்டனர்.இது குறித்து, அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளேன். ஆனால், போலீசார் விசாரணை நடத்தாமல், என்னை வீட்டை விட்டு காலி செய்யும்படி கூறுகின்றனர். தற்போது, சேதமடைந்த வீட்டில், எந்தவிதமான பாதுகாப்பு இல்லாமல் வசித்து வருகிறோம். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.