பி.எம்., கிசான் சம்மன் திட்டத்திற்கு விவசாய அடையாள எண் கட்டாயம்
கரூர், பி.எம்., கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் நிதி உதவி பெற, தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், பி.எம்., கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில், 31,704 விவசாயிகளுக்கு, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, 2,000 ரூபாய்- வீதம் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் மத்திய அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், உதவித்தொகை பெற தனித்துவ விவசாய பதிவு செய்து அடையாள அட்டை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிதி உதவி பெறும் விவசாயிகளில் இதுவரை, 21,280 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள, 10,424 பேர் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர்.அடுத்த தவணை பெறுவதற்கு விவசாயிகள் விரைவாக தனித்துவ விவசாய அடையாள எண் பெற வேண்டியது கட்டாயம். வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையம் மூலமாகவோ சிட்டா, ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் உடன் சென்று உடனடியாக பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற வேண்டும். மேலும், முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே, பி.எம்., கிஷான் திட்ட நிதி உதவி தொடர்ந்து கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.