உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை

பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை

கரூர்:துரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை காரணமாக பப்பாளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.தென் மேற்கு பருவமழை மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெய்ததால், பப்பாளி விளைச்சல் அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில், தனியாக தோட்டம் அமைத்து, பப்பாளி சாகுபடி செய்வது இல்லை. எனவே திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து கரூருக்கு, பப்பாளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, பப்பாளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்துள்ளது.இதுகுறித்து, பப்பாளி விவசாயிகள் கூறியதாவது:திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வத்திப்பட்டி, வலையப்பட்டி, லிங்கவாடி பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், ரெட் லேடி பப்பாளி ரகம், சாகுபடி செய்த எட்டு மாதங்களில் விளைச்சல் துவங்கி விடும். நடப்பாண்டில் திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் பெய்த, தென்மேற்கு பருவ மழை காரணமாக, பப்பாளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பப்பாளி அனுப்பப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து, கரூருக்கு நாள்தோறும் பப்பாளி விற்பனைக்காக வருகிறது. ஒரு கிலோ பப்பாளி, 50 முதல் 60 ரூபாய் வரை விற்றது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ, 35 முதல், 40 ரூபாய் வரை விற்பனையாகிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி